Sunday 7 September 2014

தமிழ் படிப்போம்!

நேற்று மாலை (06-09-2014) மதுரைப் புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் ஞானசம்பந்தனின் சிறப்புரை.

"தமிழில் இல்லாதது எதுவும் இல்லை. என்ன கேள்வி என்றாலும் திருக்குறளில் பதில் இருக்கிறது. ஆனால் இன்று வெளிநாட்டு அறிஞர் சொன்னால்தான் நம்மவர்களுக்கு எதுவும் பிடிக்கிறது" என்று தமது உரையில் குறிப்பிட்டார். நமது கல்வி முறையும், இன்றைய நமது கல்விச்சாலைகளும் இத்தகைய சமுதாயத்தைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

அரங்கம் முழுவதும் நல்ல கூட்டம். இத்தகைய கூட்டத்தைக் கூட்டும் - அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் வல்லமையுடைய பேச்சாளர்களும் அறிஞர்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று எப்போதும் நான் எதிர்பார்ப்பேன். நேற்று அப்பணியை பேராசிரியர் அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்தார்.

"நிகண்டு படிக்காமல் தமிழ் படிப்பு நிறைவடையாது" என்றும் ஒரு கூற்றை முன்வைத்தார் பேராசிரியர். வாரியார் சுவாமிகள் தமது "கம்பன் கவிநயம்" என்னும் நூலில் ஓரிடத்தில் "சொல்லுதல்" என்னும் சொல்லுக்கு நிகரான சொற்கள் அனைத்தையும் அவற்றின் பொருளுடன் பட்டியலிட்டுக் காட்டியிருப்பார். புத்தகத்தைப் படிக்கும்போது ஏற்படாத உணர்வும் புரிதலும் பேராசிரியர் பேச்சின்போது ஏற்பட்டது. மொழியைச் சரியாகவும் திறம்படவும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கான அரிச்சவடி இது. தமிழ் மொழியின் வளத்தை வாரியார் சுவாமிகளின் புத்தகம் நமக்கு காட்டியதென்றால், "நீ வாசலைத்தான் பார்த்திருக்கிறாய்; மாளிகையின் உள்ளே வா" என்று அழைக்கிறது பேராசிரியரின் பேச்சு.

"தமிழில் பக்தி இலக்கியம் பக்தியை மட்டும் சொல்வதில்லை. அறம், பொருள், இன்பம் மூன்றும் கலந்துதான் பக்தி இலக்கியம் படைக்கப்படுகிறது" என்று ஆண்டாள் பாசுரங்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டாள் பாடலில் ஒரு உதாரணம் மட்டும்தான் நேற்று கூறினார். நான் "எப்போ வருவாரோ" தொடர் சொற்பொழிவில் ஆண்டாள் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவை நினைவுகூர்ந்தேன். அந்த உதாரணம் நிச்சயம் கூட்டத்தில் கணிசமானவர்களை அவரவர் கொண்டிருந்த ஆண்டாள் பாசுர அனுபவத்திற்கு இட்டுச் சென்றிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவற்றையெல்லாம் விட, பேராசிரியரின் பேச்சின் வழியாக எனக்குக் கிடைத்த உன்னதமான விஷயம்: அறிவியல், கணிதம் முதலியவற்றைப் போலவே - சொல்லப்போனால் அவற்றை விட ஒருபடி அதிகமாக - ஆச்சர்யங்களையும், ஆனந்தத்தையும் தமிழ் படிக்கும்தோறும் - கேட்கும்தோறும் அள்ளித்தரும் என்பதுதான். 

No comments:

Post a Comment