Thursday 31 August 2017

எது அசல்?

நாளை (01-09-2017) முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இப்படி ஒரு ஆணை வெளியிடுவதற்கான தேவை என்ன என்று இந்த அரசாங்கம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தான்தோன்றித் தனமாக சட்டம் போடுவதற்கு இந்த நாடு என்ன மன்னராட்சி நாடா? இல்லை இப்படியெல்லாம் ஆணையிட இந்த அமைச்சர் என்ன இந்த நாட்டின் சர்வாதிகாரியா? அசல் ஆவணங்கள் தொலைந்து போனால், போக்குவரத்துத் துறையில் அவற்றுக்கான மாற்று ஆவணங்கள் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாது. சாமான்யனுக்குத்தான் தெரியும். அதே போல சாலையில் வாகனச்சோதனை செய்யும் போலீஸ் அதிகாரியின் கையில் நமது அசல் ஆவணங்களைக் கொடுத்தால் அவர் எப்படியெல்லாம் நடந்துகொள்வார் என்பதும் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாது. அதுவும் சாமான்யனுக்குத்தான் தெரியும். ஆனால் என்ன உள்நோக்கத்தோடு இந்த மாதிரியான ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்கள் என்பது சாமான்யனுக்குத் தெரியாது. அது உங்களுக்குத்தான் தெரியும்.

மக்கள் அசல் ஆவணங்கள் வைத்திருப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். மாண்புமிகு அமைச்சர் அவர்களே, இப்போது தமிழ் நாட்டில் நடக்கின்ற ஆட்சி அசல் ஆட்சிதானா? நீங்களெல்லாம் அசல் அமைச்சர்கள்தானா? இந்த மக்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சமீப காலமாக தமிழ் நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பமும் எல்லோருக்கும் தெரியும். நியாய உணர்வுள்ளவர்களாகவும், தர்மத்தின்பால் பற்றுள்ளவர்களாகவும், மக்கள் நலன் மீது அக்கறை உள்ளவர்களாகவும் (மானத்தைப் பற்றி உங்களிடம் பேசிப் பயனில்லை) நீங்கள் இருந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? அல்லது குறைந்த பட்சம் இந்தப் போலி ஆட்சியில், இப்படியெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஆணைகளை வெளியிட்டு துன்பப்படுத்தாமலாவது இருந்திருக்க வேண்டாமா?

எவன் கேட்கப் போகிறான் என்ற அலட்சியம். அதுவும் உண்மைதான். எவனும் கேட்க மாட்டான். அடுத்த தேர்தலில் நீங்களே மீண்டும் வந்து பணத்தை வீசி எறிந்தால் பொறுக்கிக்கொண்டு உங்களுக்கே ஓட்டும் கூடப் போடுவான். சொரணை இல்லாத மக்களுக்கு உங்களைப் போன்ற அராஜக ஆட்சியாளன்தான் கிடைப்பான். நடத்துங்கள் தர்பாரை!

ஆண்மையுள்ளவர்களாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் உங்கள் தனி செல்வாக்கில் மட்டும் தேர்தலை வென்று அசல் ஆட்சி நடத்துங்கள். அது இதை விடக் காட்டாட்சியாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எது அசல் என்பதை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

Monday 14 September 2015

சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்

திண்ணை வாயில் பெருக்கவந் தேனென்னைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்
நித்தச் சோறினுக் கேவல் செயவந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வ முதவினான்.

என் தகுதியால் அன்று; தன் அளவிடற்கரிய கருணையினால், வித்தை நன்கு கல்லாத எனக்கு, சிறப்பு மிக்க இந்த மேடையையும், இந்த அவையையும் அருளிய எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் என் சென்னியுற வணங்குகிறேன்.

“சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்” என்னும் தலைப்பில் உரையாற்ற நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

“காணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே - நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி” - என்பது ஞானக் கிழவி ஔவையின் வாக்கு. கிளி போல சில வார்த்தைகள் கற்ற நான் எனக்குத் தெரிந்தவற்றை திருப்பிச் சொல்ல வந்திருக்கிறேன். அவையஞ்சாமை குறித்து அறியாமையால் ஏற்பட்ட அஞ்சாமையினால் பேச முற்படுகிறேன்.

குருக்ஷேத்ரப் போர்க்களம். சேனைகள் அணிவகுத்து போருக்குத் தயாராய் நிற்கின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளாய் நிற்கின்றார்கள். எதிரணியில் இருக்கும் உறவினர்களின் மரணம் குறித்தும், அவர்களது மரணத்திற்குத் தானும், தனது போர்த்திறனும் காரணமாவது குறித்தும் துக்கிக்கிறான் அர்ஜுனன். போர்க்களத்தின் நடுவே, கண்ணன் அர்ஜுனனுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டி ஆன்ம தத்துவத்தை விளக்குகிறான்.

விளக்கத்தின் ஊடே, நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில்,

“இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இக்ஷ்வாகு ராஜனுக்குக் கூறினான். இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்.” என்று பகவான் அர்ஜுனனுக்குச் சொல்லுகிறான்.

அர்ஜுனனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவன் கண்ணனிடம், “கண்ணா! உன் பிறப்புப் பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்து கொள்வதெப்படி?” என்று கேட்கிறான்.

பகவான் பதில் சொல்கிறான், “அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. நான் அவற்றையெல்லாம் அறிவேன்; நீ அவற்றை அறிகிலை.” என்று.

இதே கருத்தைத்தான் இரண்டாவது அத்தியாயத்திலும் கண்ணன் கூறுகிறான். “இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற்போகவும் மாட்டோம்.

“ஆன்மா அழிவற்றான். இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறை யிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.” என்று கூறுகிறான்.

நீண்ட விளக்கத்திற்குப் பிறகு அர்ஜுனன் போரில் முனைகின்றான்; வெற்றியும் பெறுகிறான். போர் முடிந்த பிறகு கண்ணனும் அர்ஜுனனும் பாசறைக்குத் திரும்புகிறார்கள். போரில் வெற்றி பெற்ற மன்னனை சாரதி கை கொடுத்து தேரிலிருந்து இறக்கி விடுவது மரபு. தேரை நிறுத்தியவுடன், கண்ணன் தேரில் அமர்ந்துகொண்டே அர்ஜுனனைத் தேரிலிருந்து இறங்கச் சொல்கின்றான். அர்ஜுனன் தயக்கத்துடனே, “கண்ணா! மரபை மறந்தாயா?” என்று கேட்கிறான். கண்ணன் “நான் எதையும் மறக்கவில்லை. நான் சொல்வதைக் கேள். முதலில் தேரிலிருந்து இறங்கு.” என்று கூறுகிறான். அர்ஜுனனும் அரைமனதுடன் தேரிலிருந்து இறங்குகிறான். அவனைத் தொடர்ந்து கண்ணனும் இறங்குகிறான். குதிரைகளை அவிழ்த்து விடுகிறான். இருவரும் தேரிலிருந்து பத்தடி தூரம் சென்றவுடன் தேர் தீக்கிரையாகிறது.

அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் இதன் காரணத்தை கண்ணனிடம் கேட்கிறான். கண்ணன், “அர்ஜுனா! உன் மீது பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் போன்ற மாவீரர்களால் எய்யப்பட்ட அஸ்திரங்கள் சாதாரணமானவை அல்ல. அவை தெய்வீக அஸ்திரங்கள். அவை உன்னைத் தாக்காத வண்ணம் நானும் உனது கொடியிலிருந்த அனுமனும் காத்தோம். முதலில் நான் தேரிலிருந்து இறங்கியிருந்தால் என்னைத் தொடர்ந்து அனுமனும் தேரிலிருந்து இறங்கியிருப்பான்.” என்று கூறுகிறான். அதன் பிறகே அர்ஜுனன் குருக்ஷேத்திர வெற்றி தனது வெற்றி அல்லவென்றும், அது தர்மத்தின் மற்றும் தர்மத்தின் மொத்த வடிவான பரமான்மாவின் வெற்றி என்பதையும் புரிந்து கொள்கிறான்.

அர்ஜுனன் பல கலைகளைக் கற்ற அறிஞன். அவனுக்கு ஆன்ம தத்துவத்தை உபதேசித்தவன் பரமாத்மாவும், ஆன்ம தத்துவத்தின் ஆதி குருவுமான கண்ணன். இருந்தபோதும் அர்ஜுனன் அந்தத் தத்துவத்தை முழுவதுமாக உணரவில்லை. குருக்ஷேத்திர வெற்றி தான் பெற்ற வெற்றி என்று மயக்கம் கொள்கிறான். ஆன்ம தத்துவத்தை அவன் முழுவதும் உணர அவனைப் போன்ற அறிஞனுக்கும் கூட மேலே கூறியதைப் போல சில அனுபவங்கள் தேவைப்படுகின்றன.

ஆக, ஆன்ம அறிவைப் பெற்றவனையும், எளிய சொற்களால் ஆன்மாவை விளக்கவல்லவனும் அறிவாளிகளுள் தலைசிறந்தவன் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு விஷயத்தை நாம் பிறருக்குப் புரியம்படி எப்படிச் சொல்வது? பாரதி, பாஞ்சாலி சபதத்தில், சூதாட்டச் சருக்கத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதல் வரியை,

“தெளிவுறவே யறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்" என்று எழுதுகிறான்.

ஆக ஒரு விஷயத்தை விளக்குவதற்கு அதனை நாம் முழுமையாக அறிந்திருப்பது முதற்படி. ஒரு விஷயத்தை எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது ஆழமாக, தெளிவாக அறிந்த அறிஞராலேயே முடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு நான் இனிச் சொல்லவிருப்பதை இந்த அவை கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கண்ணன் விளக்கிய அறிதற்கரிய ஆன்ம தத்துவத்தை, நமது தமிழ்ப் புலவர்கள் எவ்வாறு எளிமையாக விளக்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். தமிழருக்கு எந்தச் சந்தேகம் தோன்றினாலும், அவர்கள் முதலில் நாட வேண்டியவர் திருவள்ளுவராகத்தான் இருக்க முடியும். நானும் அவரைக் கேட்டேன். அவர்,

“உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” - என்று கூறுகிறார். உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் ஒரே உடலுக்கு மாறி மாறி நிகழ்வதைப் போல இறப்பும் பிறப்பும் இயல்பாய் ஒரே உயிருக்கு மாறி மாறி நிகழ்கிறது என்று கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை. ஆன்மாவின் இயல்பு எது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். 18 அத்தியாயங்களில் கண்ணன் விளக்கிய ஆன்ம தத்துவத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் வள்ளுவர்.

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று பெயர் பெற்ற திருவாசகத்தை நமக்கு அருளிய மாணிக்கவாசகர்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்" - என்று கூறுகிறார்.

“மாதா வுடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே யின்னமோ ரன்னை
கருப்பையூர் வாராமற் கா.” - என்று பாடுகிறார் பட்டினத்தார்.

எண்ணத் தொலையாத பல பிறவிகளில் பிறந்து பிறந்து, உழன்று உழன்று தன் ஆன்மா களைப்படைந்துவிட்டது என்று இறைவனிடம் முறையிடுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான். ஆனால் பட்டினத்தார் ஒரு படி மேலே போய், “நான் மட்டுமா பிறந்து பிறந்து களைத்துப் போனேன்? என்னைப் பெற்றுப் பெற்று, தாய்மார்கள் களைத்துப் போனார்கள். என்னைப் படைத்துப் படைத்து, என் விதியை எழுதி எழுதி பிரம்மாவும் களைத்துப் போனான்.” என்று கூறுகின்றார்.

எண்ணத் தொலையாத பிறவிகளைப் பற்றி குறிப்பாகச் சொன்னாரே திருவள்ளுவர், மாணிக்கவாசகரையும் பட்டினத்தாரையும் போலே நேரடியாகச் சொன்னாரா என்று தேடினேன். சொல்லியிருக்கிறாரே!

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து" - என்று கூறியிருக்கிறார் வள்ளுவர். இங்கே கல்வியோடு ஆன்மாவையும் நாம் பொருத்திப் பார்க்கலாம். கல்வி அழிவற்றது; ஆன்மாவும்தான். கல்வியை ஒருவர்க்குக் கொடுக்கும்போது குறைவதில்லை; மாறாக வளர்கிறது. ஆன்மாவும் ‘தான்’ என்பதை ஒழித்து பிறருக்காக வருந்தும்போது, உழைக்கும்போது, பயன்படும்போது மேம்பாடடைகிறது. இதிலே “எழுமையும்" என்பதற்கு “ஏழு பிறவிகளில் என்று பொருள் கொள்கிறோம். அவ்வாறின்றி “பிறவிகள் எழுந்தோறும்" என்றுதான் வள்ளுவர் கூறியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.

மேலும், “கடலில் எழும் அலை, கடலிலிருந்து எழுந்து மீண்டும் கடலிலேயே அடங்குகிறது. அது போல, பரமான்மாவிலிருந்து ஜீவான்மா பிரிந்து பிறப்பெய்துகிறது. பின் உடல் இறக்கும்போது மீண்டும் பரமான்மாவின் உள்ளே அடங்குகிறது. இது, கடலில் அலைகள் எழுந்தெழுந்து அடங்குவது போல இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெறுகிறது.” என்று திருமழிசையாழ்வார் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆன்மாவையும், இறைதத்துவத்தையும் விளக்குகிறார்.

“தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத் தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை என்ன நீர்மையோ" - என்று கூறுகிறார் திருமழிசையாழ்வார்.

மேலும், கடல் வேறு அலை வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான்; இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. அதே போல பரமான்வும் ஜீவான்மாவும் ஒன்றுதான்; இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் இந்த உவமையின் மூலம் நாம் அறிய முடியும்.

“பாட்டுக்கொரு புலவன்” என்றும் “நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா" என்றும் போற்றப்படுபவன் மகாகவி பாரதி. கண்ணன் பாட்டிலே கண்ணனைக் காதலனாகப் பாவித்து, “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்; கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்" என்று பாங்கியைத் தூது விடுக்கிறான். கண்ணன் மனநிலை தூது விடும் தலைவிக்கு சாதகமாக இல்லாமல் போனால் என்ன செய்வது?

“கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்
அந்நிய மன்னர்மக்கள் பூமியி லுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்” என்று நேரடியாக நெற்றியில் அடித்தது போலப் பெண்ணைப் பேச வைக்கிறான்.

இந்தப் பாடலிலே ஒரு நுட்பம் இருக்கிறது. பாரதியின் “கண்ணன் பாட்டு" நூலுக்கு முன்னுரை எழுதும் வ.வே.சு. ஐயர், “பாரதி பரபக்தியை விடச் சாரீகமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார்” என்று கூறுகிறார்.

இந்தப் பாடலில் உலகியல் காதல் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் தலைவி, “கன்னிகை யாயிருந்து நாங்கள் காலங் கழிப்பமடி” என்று தோழியையும் சேர்த்துக்கொண்டு சொல்கிறாள். கண்ணனைத் தலைவி காதலிக்கின்றாள். கண்ணன் அவளை விட்டுப் பிரிந்தால், அவள் தனிமையில் வாழலாம்; அது நியாயம்; அது அவளது உரிமை. ஆனால் தோழியும் ஏன் கன்னிகையாய் இருக்க வேண்டும். கண்ணன் மீதான காதலில் அவளுக்கும் பங்கு இருக்கிறதா என்றால், இருக்கிறது என்பதுதான் பதில்.

கம்பராமாயணத்திலே ஒரு பாடல். ராமன் சீதையை மணம் செய்துகொண்டு நகர்வலம் வருகின்றான். சுற்றியுள்ள மக்களெல்லாம் ராமனின் மேனி அழகையும் கம்பீரத்தையும் ரசிக்கிறார்கள்; வர்ணிக்கிறார்கள். கூட்டத்திலே ஒரு பெண் சொல்கிறாள்:

“மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாணுத லொருத்தி யுள்ளம்
நெக்கென வுருகு கின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து
புக்கனன் போகா வண்ணங் கண்ணெனும் புலங்கொள் வாயும்
சிக்கென வடைத்தேன் றோழி சேருது மமளி யென்றாள்"

“என் கண் வழியாகப் புகுந்து என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வஞ்சனான ராமன் என் நெஞ்சத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் திரும்பிப் போகாவண்ணம் அவன் வந்த வாயிலான கண்ணைச் சிக்கென அடைத்துக் கொண்டேன். தோழி! எனக்கு மஞ்சம் செல்ல வழி காட்டு. நாம் இருவரும் அவனை அடைவோம் - சேருதும் அமளி" என்று கூறுகிறாள்.

உலகியல் காதலில் ஒரு பெண்ணின் கணவன் அவளுக்கு மட்டுமே கணவன். அவனுக்கு இன்னொருத்தி எவ்விதத்திலும் உரிமை கோருவதை அந்தப் பெண் அனுமதிக்க மாட்டாள். ஆனால், இறைவனைக் காதலிக்கும் பக்தி மார்க்கத்தில் இறைவன் ஒருவனே ஆண்பால்; மற்ற எல்லா உயிர்களும் பெண்பால். அவனை அடைவதுதான் அனைத்து உயிர்களின் லட்சியம்; உரிமையும் கூட. பரமான்மா என்ற ஆண்பாலை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவான்மாக்களும் ஒருசேர, ஒரே நேரத்தில் கலந்து அனுபவிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே, ராமன் என்ற மனித உருவத்திற்குள் இருந்த பரமான்வை அடையாளம் கண்ட ஜீவான்மாவின் குரல்தான் இந்தப் பாடல். அதே போல பாரதியின் பாடலிலும், உலகியல் காதலைப் பொருத்திப் பார்த்து கவிதை இன்பத்தையும் நுகரலாம்; பரபக்தியுடன் பொருத்திப் பார்த்து ஆன்ம இன்பத்தையும் நுகரலாம்.

இவையெல்லாவற்றையும் விட ஒற்றை வரியில் உயிர்த் தத்துவத்தைச் சொன்ன தமிழ்ப் புலவரும் ஒருவர் இருக்கிறார். அவர்தாம் கணியன் பூங்குன்றனார். தமது “யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் பாடலில் “சாதலும் புதுவதன்றே" என்று முழங்குகிறார் கவிஞர். “இதற்கு முன் பல முறை இறந்திருக்கிறேன்; இனிமேலும் பல முறை இறப்பேன்; சாவது எனக்குப் புதிதல்ல.” என்பது இதன் பொருள்.ஆன்ம ஞானத்தைப் பூரணமாய்ப் பெற்றவனையன்றி வேறொருவனால் இப்படியொரு வரியை எழுதிவிட முடியாது.

மற்ற உயிர்கள் சாவதை நாம் அனுதினமும் பார்க்கிறோம், அதைப் பூங்குன்றனார் சொல்லியிருக்கலாமே. அவர் இந்த வரியில் ஆன்ம தத்துவத்தைத்தான் விளக்குகிறார் என்று சொல்வதற்கு சான்று இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். சான்று இருக்கிறது. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் அவருடைய பெயரைக் குறிப்பிடவில்லை. அவருடைய ஊரின் பெயரையும், அவரது தொழிலையும் கொண்டு நாம்தான் அவருக்கு ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறோம். இதிலிருந்தே, கவிஞர் “நான் இந்தக் கவிதையை எழுதினேன்" என்ற அகங்காரத்தையும், “இது எனது அறிவு; எனது புலமை" என்ற மமகாரத்தையும் துறந்தவர் என்பதை நாம் அறிய முடியும். எனவே இது ஒரு ஆன்ம ஞானப் பாடல்தான் என்பது எனது துணிவு.

ஆன்ம ஞானத்தை எடுத்துக் காட்டியது ஒரு உதாரணம். இவ்வாறு அறிதற்கரிய பல விஷயங்களை எளிய சொற்களால் எடுத்துக் கூறிய நம் பண்டைத் தமிழ் இலக்கியகர்த்தாக்கள் அனைவருமே “சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்" என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித் திருநாடு!

பின்குறிப்பு: கடந்த 06-09-2015 அன்று கழுகுமலை திருவள்ளுவர் மன்றத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தயார் செய்த உரை. பின்னர் சில காரணங்களால் இந்த விஷயத்தைப் பேசாமல் முற்றிலும் வேறு உரையைப் பேசினேன். நான் பேசிய உரை இங்கே: https://youtu.be/Sm03mRIW8Uc

Wednesday 24 June 2015

தலைக் கவசம் - தலைவலி

ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காப்பதில் தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறையை நாம் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால் இதனால் மட்டும் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்து விட முடியுமா என்ற சந்தேகமும் இயல்பாகவே நமக்கு எழுகிறது.

ஓட்டுனர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு சாலைவிதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்குவது, திரும்பும்போது சைகை காட்டுவது, திரும்பும் வாகனங்களுக்கு வழி விடுவது, பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது பொறுமை காப்பது போன்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் பெரும்பாலோர் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சாலையின் இடதுபுறமாகத்தான் வாகனத்தை இயக்க வேண்டும் என்று தெரியாதவன் கூட, காசு கொடுத்தால் கழுதைக்கும் லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரிகளின் பேராசையையும் பொறுப்பின்மையையும் பயன்படுத்தி ஓட்டுனர் உரிமம் வாங்கி, அரசாங்க அங்கீகாரத்துடன் வாகனம் ஓட்டும் நாட்டில், தலைக் கவசம் அணிவதால் ஒருவன் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்று இந்த அரசு கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

ஒளிவுமறைவாக லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த நிலை மாறி, எந்தவிதக் கூச்சமுமின்றி, பெயிண்ட் அடிக்காவிட்டால் 5000; பிரேக் பிடிக்காவிட்டால் 10000 என்று எதற்கும் ஒரு விலையை நிர்ணயித்து தகுதிச் சான்று வழங்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளைக் கண்டுகொள்ளாமல், தலைக் கவசம் உயிரைக் காப்பாற்றும் என்று நமது அரசாங்கம் சொல்வதை எப்படி நம்புவது?

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும், பெண்களையும் கண்டுகொள்ளாமல், ஆவணங்கள் நடப்பில் இருந்தாலும், சோதனையின்போது காண்பிக்கத் தவறும் பொதுமக்களிடம் கூட ஐநூறும் ஆயிரமும் வாங்குவதும், விபத்து நடக்கும்போது தவறு யார் பக்கம் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பெரிய வாகனத்தின் மீது வழக்குப் பதிவு செய்வதுமான காவல்துறை இருக்கின்ற நாட்டில், தலைக் கவசம் உயிரைக் காப்பாற்றும் என்று அரசாங்கம் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது?

எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தின் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற இருவர், கட்டுப்பாடில்லாமல் வந்த வாகனம் மோதி சமீபத்தில் பலியானார்கள். எந்த இடர்ப்பாடும் இல்லாத, நேரான சாலையில் காரணமே இல்லாமல் கவனக் குறைவாலோ, திறமைக் குறைவாலோ, அலட்சியத்தாலோ விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்யாமல், அந்த இடத்தில் இரண்டு வேகத்தடைகளை அமைத்து அனைவருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்திய அரசு, தலைக் கவசம் அணியவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

வழிப்பறி போல சுங்கக் கட்டணம் வசூலித்து விட்டு, சாலையை சரிவரப் பராமரிக்காமல் தரமற்ற சாலைகளை மக்களைப் பயன்படுத்தச் செய்யும் அரசு, உயிரிழப்புக்கு தலைக் கவசம் அணியாததுதான் காரணம் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

சாதாரண வாகனங்கள் மட்டுமல்லாது, சாலையோர உணவகங்களில் இலவசச் சோற்றுக்காக வரும் அரசுப் பேருந்துகள் வரை பல வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் எதிர்த்திசையில் வருவதைக் கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம், உயிரிழப்புக்குக் காரணம் தலைக் கவசம் அணியாததுதான் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?

தலைக் கவசம் அணியாதது சட்ட விரோதம் என்றால் சட்டத்தை மதிக்காமல் விபத்து ஏற்படுத்தி உயிரிழந்தவனுக்கு இழப்பீடு வழங்குவது சட்ட விரோதம் மட்டுமல்லாது தலைக் கவசம் அணியாததை ஊக்குவிக்கும் செயலும்தான். சட்டத்தை மீறியவனுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு, மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவது எந்த வகையான நீதி பரிபாலன முறை என்பது நமக்குப் புரியவில்லை.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், முதலமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 60000 யூனிட் ரத்தம் சேகரிக்கிறோம் என்று சொல்லி, லைசென்ஸ் பெறுவது, தகுதிச் சான்று புதுப்பிப்பது போன்ற வேலைகளுக்காக வந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ரத்தத்தை உறிஞ்சி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள்.

தரமும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத, எடைக்குப் போடும் தரத்திலுள்ள அரசுப் பேருந்துகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுவதும் பயணம் செய்கின்றனர். ஆனால் மாணவர் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயன்ற அரசாங்கம் கல்வி நிலைய வாகனங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. எல்லா வாகனங்களும் ஒரு அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு தகுதிச் சான்று புதுப்பிக்கும்போது, கல்வி நிலைய வாகனம் மட்டும் நான்கு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. ஒரு அதிகாரிக்குப் பதிலாக நான்கு அதிகாரிகள் சம்பாதிப்பதுதான் இதனால் கை மேல் கண்ட பலன்.

சரியான அளவில், தெளிவாகப் புரியும்படி பதிவு எண்ணை எழுதாத பல வாகனங்களை விட்டுவிட்டு, பதிவு எண் தெளிவாகத் தெரியும்படி எழுதியுள்ள IND நம்பர் பிளேட் பொருத்திய வாகன உரிமையாளர்களுக்கு ரூ. 100 அபராதம் விதித்தார்கள். நம்பர் பிளேட் தயாரித்து விற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை வந்தது என்பதுவும், அங்கீகாரம் இல்லாத பொருளை விற்பனை செய்யத் தொடங்கும்போது தொந்தரவு வராமல் இருக்க அவர்கள் என்ன விலை கொடுத்தார்கள் என்பதுவும் யாருக்கும் தெரியாது.

தலைக் கவசம் கட்டாயம் என்ற நிலை வந்துவிட்டால் சாலையோரங்களிலும், ஆட்டோ ஸ்டோர்களிலும் கண்டபடி, தலைக் கவசம் விற்று சம்பாதிப்பார்கள். இரண்டு மூன்று மாதங்கள் தாறுமாறாக விற்றுத் தீர்த்த பின்னர், தலைக் கவசத்தின் மீதான கண்டிப்பு தளர்த்தப்படும் என்பதுதான் இன்று வரை பல முறை நாம் கண்ட அனுபவம். ஆகவே, இன்று தலைக் கவசத்தைக் கட்டாயப்படுத்தும் அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் நோக்கம் மக்கள் நலன் அல்ல என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை.

"ஓரஞ் செய்தி டாமே, - தருமத்
துறுதி கொன்றி டாமே,
சோரஞ் செய்தி டாமே, - பிறரைத்
துயரில் வீழ்த்தி டாமே,
ஊரை யாளு முறைமை - உலகில்
ஓர்பு றத்து மில்லை" என்ற பாரதியின் வரிகள் இன்றும் உயிர் வாழ்கின்றன.

Tuesday 24 February 2015

மதமாற்றப் பித்து

மரியாதைக்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவதும், அதனை அனுமதிப்பதும் அரசாங்கத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தராது. மாறாக மக்கள் அபிமானத்தைக் கெடுக்கவே செய்யும்.

மதமாற்றம்தான் அன்னை தெரசாவின் நோக்கமாகவே இருந்திருந்தாலும் கூட (நான் அதை நம்பவில்லை) அவருடைய தொண்டு எதனோடும் ஒப்பிட முடியாதது. யாரும் செய்ய முடியாத (நினைக்கவும் முடியாத) சேவையை தம் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறார். இன்று மதம் மாற்றுவதை மட்டும் தம் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றிப் பேசுவதைப் போல இவரைப் பற்றி நிச்சயமாகப் பேசக்கூடாது. இருவரையும் ஒப்பிட்டுப் பேசுபவன் மூடனாகத்தான் இருப்பான். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதுதான் அறிவுடையவர்களின் செயலாக இருக்க முடியும்.

"ஐயோ மதம் மாற்றுகிறார்கள்" என்று கூப்பாடு போடுவதினாலோ மதம் மாற்றுபவர்களை குற்றம் கூறுவதாலோ மதமாற்றத்தை தடுத்து விட முடியாது. மதமாற்றம் செய்வதில் மாற்றுகிறவனின் பங்குக்கு, மாறுகிறவனின் பங்கு ஒன்றும் குறைந்தது அல்ல. மேலும், மதம், கடவுள் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புரிதலும் இல்லாதவன்தான் மதம் மாறுவான். அவனால் எந்த மதத்துக்கும் - எந்தக் கடவுளுக்கும் - லாபமுமில்லை; நஷ்டமுமில்லை.

எனவே, மதமாற்றம் குறித்துப் பேசுவதே தேவையற்றது. அதை விட்டுவிட்டு ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வேறு உருப்படியான வேலையைப் பார்க்கலாம். இல்லை, பேசித்தான் தீர வேண்டும் என்றால், யாரையும் இழிவுபடுத்தாமல் கவனமாகப் பேசுவது நல்லது.

Sunday 8 February 2015

எனக்குப் பிடித்த குறள்


ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் கசடறக் கற்றவன் அல்லன் ஆகையால், ‘எனக்குப் பிடித்த குறள்’ என்னும் பொருளில் ஏதேனும் சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்பது ஒருபுறமிருந்தாலும், ஆசையின் நிமித்தம் இதனை எழுதுகின்றேன்.

அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறட்பாக்களில் எதையும், எந்தக் காரணம் காட்டியும் ஒதுக்கிவிடவோ, குறைத்து மதிப்பிடவோ முடியாது. இருப்பினும், நாம் வாழும் சூழலுக்கேற்பவும், நாம் சந்தித்த அனுபவங்களுக்கேற்பவும் சில பாக்கள் நம் நினைவில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றன.

என் உள்ளம் கவர்ந்த குறள் இதுதான்:

இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு. (
987)

சான்றோர்கள் என்று நாம் போற்றும் யாருடைய வாழ்க்கையை நாம் கவனித்தாலும், அவர்கள் எந்த பேதமுமின்றி எல்லோருக்கும் இனியவே செய்ததை நாம் அறிய முடியும்.

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, தம் வாழ்நாள் முழுவதும், யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தவர் மட்டுமல்லர்; வாழ்நாள் முழுவதும் அகிம்சையைப் போதித்தது மட்டுமல்லாது, தம் வாழ்நாளின் கடைசி நொடி வரை கடைப்பிடித்தும் காட்டியவர். தென்னாப்பிரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி, அவர் மீது கடும் குரோதத்துடன் நடந்தவர்கள் மீது கூட அவர் கோபம் கொண்டதில்லை. மாறாக, தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் யாருக்கும் பாதிப்பில்லாத ஒரு சமரசப் புள்ளியை எட்டுவதற்கே முயற்சி செய்தார்.

ஜெயகாந்தன் தம் நாவல் ஒன்றில் “நமது கொள்கைக்கு எதிரான கருத்துக்களை யாரும் பேசுவதை நாம் விரும்பவில்லை என்றால், நாம் கடைப்பிடிக்கும் தர்மத்தில் நமக்கே நம்பிக்கை இல்லையென்று பொருள்” என்று கூறுவார். நமக்கு எதிரான கருத்துக்கள் நம்மைப் பண்படுத்துகின்றன. அவதூறாகவும் அநாகரிகமாகவும் இருந்தாலும் கூட, தமக்கு எதிரான கருத்துக்களுக்கு பதில் சொன்னவர் அல்லர் நமது பெருந்தலைவர் காமராஜர். “எனக்கு யானைக்கால் என்று யாராவது சொன்னால், ஒவ்வொருவரிடமும் என் காலைக் காட்டிக்கொண்டா இருக்க முடியும்?” என்று கூறிவிட்டு தம் காரியமே கண்ணாக இருந்தவர். தாம் முதல்வராக ஆட்சி அமைத்தபோது தம்மை எதிர்த்து அரசியல் செய்தவர்களுக்கும் மக்களின் நன்மையை முன்னிட்டு அமைச்சரவையில் இடமளித்தவர்.

ஒரு செல்வந்தரிடம் நன்கொடை வேண்டிச் சென்றிருந்தார் அன்னை தெரசா. அந்த செல்வந்தரோ அன்னையின் முகத்தில் உமிழ்ந்தார். அன்னையின் கனிவான தோற்றம் சற்றும் மாறவில்லை. உள்ளார்ந்த அன்புடன் அவர் கூறினார், “ஐயா! தாங்கள் இப்போது தந்ததை நான் வைத்துக்கொள்கிறேன். உங்கள் உதவிக்காகக் காத்திருக்கும் கஷ்டப்பட்ட ஜீவன்களுக்கு ஏதேனும் தாருங்கள்” என்று கூறினார். இதுவல்லவோ சான்றாண்மை!


ஆகையால் சான்றாண்மை பயில விரும்பும் ஒவ்வொருவருக்கும் பற்றுக்கோலாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் குறள் இதுதான் என்று நான் திடமாக நம்புகிறேன்.


Saturday 15 November 2014

இந்து வேதங்கள் காட்டும் கடவுள்

சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் 1-ல்:

அருள் வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விதிகள், விதிகளாவதால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள் சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக் கூடியவர். மாறக் கூடிய பொருள் கூட்டுப்பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருட்களும் அழிவு என்னும் மறுதலை அடைந்தே தீர வேண்டும். எனவே கடவுள் இறந்துவிடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும் படைப்பவனும், ஆரம்பமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணை கோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால், ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல உலகங்கள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்துவிடுகின்றன. இதையே பிராமணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்'. இது தற்கால விஞ்ஞானத்திற்குப் பொருந்தியதாக உள்ளது.

Monday 8 September 2014

வாழிய செந்தமிழ்!




இது திருநெல்வேலியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் பள்ளி. இதன் சுற்றுச்சுவரில் "ENGLISH ZONE" என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தப் பள்ளி வளாகம் தமிழ் உட்பட ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் தடை செய்யப்பட்ட பகுதி என்பதாகும். இந்தப் பள்ளி ஒரு உதாரணம் மட்டும்தான். இதைப் போன்ற இன்டர்நேஷனல், CBSE மற்றும் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் தமிழகம் முழுக்க இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் ஹிந்தியை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தியை விரட்டுவதன் மூலமும், தமிழைப் பள்ளிகளில் தடை செய்வதன் மூலமும்தான் தமிழை வளர்க்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்களோ என்னவோ!

தமிழ்க் குழந்தைகளை மாணவர்களாகக் கொண்டு, தமிழகத்தில் இயங்கும் பள்ளியில், தமிழ் தடை செய்யப்பட்ட மொழி என்பது எத்தனை பெரிய அவமானம். இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைப் படிக்க வைப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் பல பெற்றோர்.

சாதாரண மக்கள் இதைப் பெருமையாகக் கருதுவதைப் பற்றி நாம் கவலைப்பட இடமில்லை. தமிழின் பெயரால் அரசியலும், பிழைப்பும் நடத்தும் பெரும்பான்மையான வாய்ப்பேச்சு வீரர்களின் குழந்தைகளும் கூட இத்தகைய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்பதுவே கசப்பான உண்மை.

இத்தகைய வேஷதாரிகளின் பேச்சையும், தமிழைத் தடை செய்யும் பள்ளிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும். "ஆங்கிலம் படித்தால்தான் அறிவாளியாக முடியும்" என்ற அடிமைப் புத்தியும் நம்மிடமிருந்து விலக வேண்டும்.

தமிழும், தமிழனும் வளர வேண்டுமானால், அதற்கு வழி தமிழைக் கற்பதுதானே தவிர, பிற மொழிகளை விரட்டுவது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எந்த மொழியைப் படித்தாலும், படிக்காவிட்டாலும் தமிழைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு!