Monday 8 September 2014

வாழிய செந்தமிழ்!




இது திருநெல்வேலியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் பள்ளி. இதன் சுற்றுச்சுவரில் "ENGLISH ZONE" என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தப் பள்ளி வளாகம் தமிழ் உட்பட ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகள் தடை செய்யப்பட்ட பகுதி என்பதாகும். இந்தப் பள்ளி ஒரு உதாரணம் மட்டும்தான். இதைப் போன்ற இன்டர்நேஷனல், CBSE மற்றும் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் தமிழகம் முழுக்க இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் ஹிந்தியை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தியை விரட்டுவதன் மூலமும், தமிழைப் பள்ளிகளில் தடை செய்வதன் மூலமும்தான் தமிழை வளர்க்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்களோ என்னவோ!

தமிழ்க் குழந்தைகளை மாணவர்களாகக் கொண்டு, தமிழகத்தில் இயங்கும் பள்ளியில், தமிழ் தடை செய்யப்பட்ட மொழி என்பது எத்தனை பெரிய அவமானம். இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைப் படிக்க வைப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் பல பெற்றோர்.

சாதாரண மக்கள் இதைப் பெருமையாகக் கருதுவதைப் பற்றி நாம் கவலைப்பட இடமில்லை. தமிழின் பெயரால் அரசியலும், பிழைப்பும் நடத்தும் பெரும்பான்மையான வாய்ப்பேச்சு வீரர்களின் குழந்தைகளும் கூட இத்தகைய பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்பதுவே கசப்பான உண்மை.

இத்தகைய வேஷதாரிகளின் பேச்சையும், தமிழைத் தடை செய்யும் பள்ளிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும். "ஆங்கிலம் படித்தால்தான் அறிவாளியாக முடியும்" என்ற அடிமைப் புத்தியும் நம்மிடமிருந்து விலக வேண்டும்.

தமிழும், தமிழனும் வளர வேண்டுமானால், அதற்கு வழி தமிழைக் கற்பதுதானே தவிர, பிற மொழிகளை விரட்டுவது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எந்த மொழியைப் படித்தாலும், படிக்காவிட்டாலும் தமிழைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு!

No comments:

Post a Comment