Tuesday 24 February 2015

மதமாற்றப் பித்து

மரியாதைக்குரியவர்களாக அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவதும், அதனை அனுமதிப்பதும் அரசாங்கத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தராது. மாறாக மக்கள் அபிமானத்தைக் கெடுக்கவே செய்யும்.

மதமாற்றம்தான் அன்னை தெரசாவின் நோக்கமாகவே இருந்திருந்தாலும் கூட (நான் அதை நம்பவில்லை) அவருடைய தொண்டு எதனோடும் ஒப்பிட முடியாதது. யாரும் செய்ய முடியாத (நினைக்கவும் முடியாத) சேவையை தம் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறார். இன்று மதம் மாற்றுவதை மட்டும் தம் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றிப் பேசுவதைப் போல இவரைப் பற்றி நிச்சயமாகப் பேசக்கூடாது. இருவரையும் ஒப்பிட்டுப் பேசுபவன் மூடனாகத்தான் இருப்பான். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்வதுதான் அறிவுடையவர்களின் செயலாக இருக்க முடியும்.

"ஐயோ மதம் மாற்றுகிறார்கள்" என்று கூப்பாடு போடுவதினாலோ மதம் மாற்றுபவர்களை குற்றம் கூறுவதாலோ மதமாற்றத்தை தடுத்து விட முடியாது. மதமாற்றம் செய்வதில் மாற்றுகிறவனின் பங்குக்கு, மாறுகிறவனின் பங்கு ஒன்றும் குறைந்தது அல்ல. மேலும், மதம், கடவுள் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புரிதலும் இல்லாதவன்தான் மதம் மாறுவான். அவனால் எந்த மதத்துக்கும் - எந்தக் கடவுளுக்கும் - லாபமுமில்லை; நஷ்டமுமில்லை.

எனவே, மதமாற்றம் குறித்துப் பேசுவதே தேவையற்றது. அதை விட்டுவிட்டு ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் வேறு உருப்படியான வேலையைப் பார்க்கலாம். இல்லை, பேசித்தான் தீர வேண்டும் என்றால், யாரையும் இழிவுபடுத்தாமல் கவனமாகப் பேசுவது நல்லது.

No comments:

Post a Comment