Wednesday 9 March 2011

கதை எப்படிச் சொல்வது?

கதை சொல்லாவிட்டால் உனக்குப் புரியாது.
ஆனால் கதை எப்படிச் சொல்வது?

காற்றில் கலந்த கானம் போல்
இந்தக் கதையில் கரைந்து
காணாமல் போனவன் நான்.
என்னிடம் மிஞ்சிய சொற்களால்
மொழியைத்தான் காட்ட முடியும்...
கதையை அல்ல.

இருந்தாலும்...
உன் காதல்
என்னைக் கதை சொல்லத் தூண்டுகிறது.

என்னையும் அவளையும்
இரண்டு புள்ளிகளாக்கி
இறைவன் வரைந்த வட்டம்
இந்தக் கதை.
இப்போது எனக்கு ஒரு புள்ளிதான் தெரிகிறது.

உலகம்
நம் முகத்தைப் பிரதிபலிக்காமல் போனால்
பேச்சுக்கும் கதைக்கும்
இடமில்லாமல் போய்விடும்.

இதைப் புரிந்துகொள்ளாத வரை
அவள் முன்னால்
நானும் இப்படித்தான் நின்றேன்.

வாழ்க்கையை அறிந்த கணத்தில்
வார்த்தைகளை இழந்துவிட்டேன்.

கதை சொல்லாவிட்டால் உனக்குப் புரியாது.
ஆனால் கதை எப்படிச் சொல்வது?

No comments:

Post a Comment