Friday 18 April 2014

மாற்றங்களை ஏற்போம்; மாற்றங்களை ஏற்படுத்துவோம்!

15-04-2014 அன்று மாலை மதுரையில் "மனிதத்தேனீ" ரா. சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய "மாற்றங்களை ஏற்போம்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நானும் அப்பாவும் கலந்துகொண்டோம்.

சொக்கலிங்கம் அவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ, மகிழ்வோர் மன்றத்தில் நகைச்சுவைப் பேச்சாளராகவோதான் பார்த்திருந்தேன். புத்தக வெளியீட்டு விழாவில் ஏற்புரை ஆற்றும்போது, அவருக்குள்ளிருந்த அசல் பேச்சாளரைக் காண முடிந்தது. விழாவைக் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டியிருந்ததால் இருபது நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஆனாலும் அதிலேயே நமக்குப் பல விஷயங்கள் கிடைத்துவிட்டன.

"மாற்றங்களை ஏற்போம்" என்பது வெளியிடப்பட்ட புத்தகத்தின் தலைப்பாக இருந்தாலும், சமுதாயத்தில் சில மாற்றங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்தே அவர் பேச்சு இருந்தது.

வருமான வரி உட்பட வரிகளைச் சரியாக செலுத்தாதவருக்கு அரசாங்கத்தை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ, குறை கூறவோ எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்பதை தனது பேச்சில் வலியுறுத்தினார். அரசாங்கத்தை இன்று பலர் குறை கூறுகிறார்கள்; நாமும் ஆமோதிக்கிறோம். ஆனால் சற்று யோசித்தால், குறை கூறியவர்களில் பெரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் என்பதை அறிய முடிகிறது.

சட்டமும், காவல்துறையும் சாமான்யனுக்கு சாதகமாக இல்லை என்றும் அவர் கூறினார். மறுநாள் அவருடன் தொலைபேசியில் பேசியபோது, "காவல்துறை மட்டுமல்ல, எல்லா அரசு ஊழியர்களுமே சாமான்யர்களைத் துச்சமாகத்தான் மதிக்கிறார்கள்; நம்மால் என்ன செய்ய முடிகிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "நம்மால் அவர்களைத் திருத்த முடியாதுதான்; ஆனாலும் நமது எதிர்ப்பைப் பதிவு செய்வதுதான் சரி" என்று கூறினார். அவர் சொல்வதும் சரிதான். எதுவும் நடக்காது என்று எல்லோரும் சும்மா இருந்தால், நம்மைக் கேட்க யாருமே இல்லை என்ற எண்ணம்தான் தவறு செய்பவர்களுக்கு வரும். அவர்கள் பாதுகாப்பாக உணர்வது சமூகத்திற்கு ஆபத்தானது. யாராவது செய்வார்கள் என்று எதிர்பார்க்காமல் நாம்தான் செய்வோமே என்ற எண்ணத்தை அவருடனான உரையாடல் எனக்குள் ஏற்படுத்தியது. முதலில் நான் தவறுகளைத் தட்டிக் கேட்டால்தான் என் குழந்தைக்கு, "பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா" என்பதையும், "தெய்வம் நமக்குத் துணை பாப்பா" என்பதையும் உண்மையான உணர்வோடு சொல்லித்தர முடியும் என்பதை உணர்ந்தேன்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி குறித்தது. "இன்றும் காங்கிரஸ் கட்சிக்காரனாகத்தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று பெருமிதத்தோடு தனது பேச்சில் குறிப்பிட்டார். இன்றிருக்கும் நிலையிலிருந்து காங்கிரஸ் மீண்டு வரும் என்ற நம்பிக்கை அவர் பேச்சில் தென்பட்டது. இன்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி தோற்க வேண்டிய கட்சிதான்; ஆனால் அழிய வேண்டிய கட்சி அல்ல. மேலும் இந்தியா முழுவதும் வேரூன்றியிருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸ் தலைதூக்க முடியாமல் போவது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல. இவையெல்லாம் நமது அறிவுக்குப் புரிந்தாலும், காங்கிரஸ் கட்சி தனது செயல்பாட்டால், மக்கள் மனதில் உணர்வுரீதியான எதிர்மறைத் தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இவர் போன்றவர்களின் செயல்பாட்டால், காங்கிரஸ் கட்சியும், அதன் மூலம் நமது நாடும் எதிர்காலத்தில் மேம்பாடடையும் என்ற நம்பிக்கையை அவருடைய பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது.

அவரது அறிமுகமும், அவருடனான நட்பும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகக் கருதி மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment